ஹீலியம் வாயு பூ மண்டலத்தில் ஏராளமாக இருந்தாலும் பூமியில் அரிதான பொருளாக உள்ளது. இயற்கை எரிவாயுவிலிருந்து பிரித்தெடுப்பது ஒன்றே அதை பெறும் வழி. ரசிய உக்ரைன் போர் ஹீலியம் கிடைப்பதை மேலும் சிக்கலாக்கியுள்ளது. மருத்துவத்திலும் மின்னணு கருவிகளிலும் விண்கல உந்து பொருளாகவும் ஹீலியம் பயன்படுகிறது. குறிப்பாக மருத்துவத்தில் எம்ஆர்ஐ ஸ்கேனர்களில் ஹீலியம் குளிர்விக்கும் பொருளாக பயன்படுகிறது. ஆகவே இப்போது எம்ஆர்ஐ கருவிகளை முழுவதும் பயன்படுத்த இயலாத நிலை உள்ளது. இதற்கு மாற்றாக பெங்களூருவிலுள்ள வாக்ஸெல்கிரிட் எனும் நிறுவனம் திரவ நைட்ரஜனை குளிர்விக்கும் பொருளாக பயன்படுத்தி புதிய ஸ்கேனரை உருவாக்கியுள்ளது. திரவ நைட்ரஜன் விலை மலிவானது;அதிக அளவில் கிடைக்கிறது. இதுவும் இன்னும் பல புதிய அம்சங்கள் கொண்ட முதன்முதலாக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட எம்ஆர்ஐ ஸ்கேனரை இந்த நிறுவனம் அக்டோபரில் வெளியிட உள்ளது. இந்த நிறுவனம் உற்பத்தி செய்யும் 1-5 டன் எம்ஆர்ஐ கருவிகள் எடை குறைவானது; எடுத்து செல்லக்கூடியது;எளிதாக நிறுவவும் இயக்கவும் தொலைதூர கிராமங்களில் கூட பராமரிக்கவும் முடியுக்கூடியது. எம்ஆர்ஐ ஸ்கேனர் திசுக்களின் முப்பரிமாண பிம்பங்களைக் காட்டும் முக்கிய கருவியும் புற்று நோய் கட்டிகளை ஆரம்பத்திலேயே கண்டறிய சிறந்ததும் ஆகும். ஆனால் இது தேவைப்படும் பல இந்தியர்களுக்கு அது எட்டாததாகவே உள்ளது.